(கோகி கருளணாநிதி)
கூலாய்:
தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் ம.இ.கா.விற்கு அரசாங்கம் மூலம் 221 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டதாக வெளியான செய்திகளை முற்றிலும் மறுத்துள்ள ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அந்தத் தகவல் உண்மைக்குப் புறம்பானது என்று தெரிவித்தார்.
கூலாயில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவறான தகவலை வெளியிட்ட இரண்டு இணையச் செய்தி தளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கட்சியின் வழக்கறிஞர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தவறான செய்தியைத் திருத்த மறுத்தால் அவதூறுத் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிதி ம.இ.கா.விற்கு அல்ல; மாறாக கட்சியின் கல்வி அமைப்பான எம்ஐஇடி நிர்வகிக்கும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளுக்காக ஆண்டுதோறும் 25 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தார். அந்த நிதியின் ஒவ்வொரு செலவும் நிதி அமைச்சின் கண்காணிப்பு, தணிக்கைக்கு உட்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான அமைச்சரவையில் இந்த நிதி ஒப்புதல் பெறப்பட்டது. முதல் ஆண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 25 மில்லியனில் 15 மில்லியன் ரிங்கிட் மட்டுமே விழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசில் 2023 முதல் 2026 வரையிலான ஒவ்வோர் ஆண்டும் முழு 25 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான காலத்தில் சுமார் 15 ஆண்டுகள் பழைமையான ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் பழுதுபார்ப்பு. மேம்பாட்டுப் பணிகளுக்காக ஒருமுறை மட்டும் 15 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதி வழங்கப்பட்டது என அவர் விளக்கமளித்தார்.




















