கோலாலம்பூர்:
மலேசியாவிற்குள் இஸ்ரேலியப் பிரஜைகள் எவரேனும் நுழைந்திருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் எவ்வித சமரசமுமின்றி உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என்றும், இஸ்ரேல் நாட்டை மலேசியா அங்கீகரிக்கவில்லை என்ற வெளியுறவுக் கொள்கையில் நாடு மிகத் உறுதியாக இருப்பதாகவும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஜோகூர், ஃபாரஸ்ட் சிட்டியில் உள்ள பள்ளி ஒன்றில் இஸ்ரேலியப் பிரஜைகள் இரட்டைக் குடியுரிமை கொண்ட பாஸ்போர்ட்டுகளைப் பயன்படுத்தி நுழைந்துள்ளதாகச் சமூக ஊடகங்களில் எழுந்த புகார்களை அடுத்து, நாட்டின் அனைத்துப் பாதுகாப்பு முகமைகளும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த விவகாரம் குறித்து உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடிர் விரைவில் விரிவான விளக்கத்தை வழங்குவார் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் இறையாண்மையையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் நிலைநிறுத்தும் இந்த அதிரடி முன்னெடுப்பின் மூலம், விதிகளுக்குப் புறம்பாக நாட்டிற்குள் நுழைய முயலும் வெளிநாட்டினருக்கு எதிராகப் பாதுகாப்புப் படைகளின் கண்காணிப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.




















