கோலாலம்பூர்:
இன்று அதிகாலை நடைபெற்ற 2026 உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதின. இந்த விறுவிறுப்பான போட்டியைக் கண்டு மகிழவும் கொண்டாடவும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க மெர்டேக்கா சதுக்கத்தில் (Dataran Merdeka) ஒன்று திரண்டனர்.
ரசிகர்கள் தங்களின் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி கால்பந்து திருவிழாவைக் கொண்டாடிய போதிலும், போட்டி முடிந்தவுடன் அந்த வரலாற்றுப் மைதானம் முழுவதும் பிளாஸ்டிக் பாட்டில்கள், உணவுப் பொட்டலங்கள் என குப்பை மேடாகக் காட்சியளித்தது.
சம்பவத்தைத் தொடர்ந்து, மெர்டேக்கா சதுக்கத்தில் சிதறிக் கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தும் தூய்மைப் பணிகளை உடனடியாகத் தொடங்கியுள்ளதாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் (DBKL) தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

நகரின் தூய்மையைப் பராமரிப்பது என்பது எந்நேரமும் தூய்மைப் பணியாளர்களை மட்டுமே சார்ந்திருக்கக் கூடாது. பொதுமக்கள் கலைந்து சென்ற பின்னரும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.”மெர்டேக்கா சதுக்கம் என்பது மலேசியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமைக்குரிய அடையாளமாகும். மக்கள் அந்த இடத்தை விட்டுச் செல்லும் விதம், நாட்டின் பாரம்பரியத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் மரியாதையை பிரதிபலிக்கிறது” என்று, பொதுமக்களின் அலட்சியப் போக்கு குறித்து DBKL காரசாரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் நிகழ்வுகளைக் கொண்டாடுவதற்கும் மகிழ்ச்சியைப் பகிர்வதற்கும் முழு உரிமை உண்டு. ஆனால், அந்த சுதந்திரம் பொதுச் சொத்துக்களையும் பொது இடங்களையும் அசுத்தப்படுத்துவதற்கான அனுமதி கிடையாது.
“ஒரு சிறந்த நகரம் என்பது மக்கள் அங்கு திரளும் போது மட்டுமல்ல, அவர்கள் கலைந்து சென்ற பிறகு அந்த நகரம் எந்த நிலையில் விட்டுச் செல்லப்படுகிறது என்பதைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது. கோலாலம்பூர் நம் அனைவரின் இல்லம்; அதை நம் சொந்த வீட்டைப் போல் சுத்தமாகப் பராமரிப்போம்,” என DBKL பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.




















