ஷா ஆலாம் LRT தண்டவாளத்தில் அத்துமீறி நுழைந்த நபர் கைது: ரயில் சேவை அரை மணி நேரம் பாதிப்பு!

கோலாலம்பூர்:

இன்று அதிகாலை ஜாலான் மேரு எல்ஆர்டி (LRT) நிலைய தண்டவாளத்தில் நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்ததைத் தொடர்ந்து, ஷா ஆலாம் வழித்தடத்துக்கான ரயில் சேவை சுமார் 30 நிமிடங்கள் பாதிப்புக்குள்ளானது.

காலை 6.15 மணி அளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததை உறுதிப்படுத்திய ‘ராபிட் கேஎல்’ (Rapid KL), ஜாலான் மேரு மற்றும் ஜம்பாத்தான் கோத்தா நிலையங்களுக்கு இடையிலான இரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, தண்டவாளம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்த பின்னரே சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியதாகத் தெரிவித்தது.

இச்சம்பவத்தைக் கண்டறிந்ததும் விரைந்து செயல்பட்ட நிலைய ஊழியர்களும் துணைக் பாதுகாப்பு அதிகாரிகளும் அந்தச் சந்தேக நபரைக் கைது செய்து மேலதிக நடவடிக்கைக்காகப் பண்டார் பாரு கிள்ளான் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தண்டவாளத்தில் அத்துமீறுவது கடுமையான குற்றமாகும் என எச்சரித்த ‘ராபிட் கேஎல்’, ரயில் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டதோடு, சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைக் கண்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here