கோலாலம்பூர்:
‘உருசான் ஜமாஆ’ (Urusan Jamaah Sdn Bhd) நிறுவனத்தின் முதல் கட்ட சுகுக் (Sukuk) கடன் பத்திரங்கள் கடந்த மே 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையிலும், தாபுங் ஹாஜிக்கு (Tabung Haji) அரசாங்கம் செலுத்த வேண்டிய RM12.5 பில்லியன் நிதிப் பொறுப்பை இன்னும் முழுமையாகக் செலுத்தவில்லை என முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரஃபிஸி ரம்லி குற்றம் சாட்டியுள்ளார்.
இத்தொகையை அரசாங்கம் முழுமையாக ரொக்கமாகவோ அல்லது அதற்குச் சமமான சொத்துக்களாகவோ வழங்கியிருக்க வேண்டும் என்றும், ஆனால் RM965 மில்லியன் மட்டுமே சொத்துக்களாக வழங்கப்பட்டு, மீதமுள்ள RM11.5 பில்லியன் தொகை மேலும் 10 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட புதிய சுகுக் கடன் பத்திரங்களாக மாற்றப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தாபுங் ஹாஜியைச் சீரமைப்பதற்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்பட்ட பல பில்லியன் ரிங்கிட் நிதி எங்கே போனது என்பது குறித்து அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.
2018-ஆம் ஆண்டின் நிதி மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், 2026 மற்றும் 2029-ல் சுகுக் முடிவடையும் போது அரசு பணத்தைத் திரும்பச் செலுத்த வேண்டும். 2019 முதல் பல்வேறு ஆட்சியின் கீழ் இதற்காக நிதி ஒதுக்கப்பட்டபோதிலும், 2021-ல் கோவிட்-19 நிவாரணப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி வழங்கப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.






















