கிள்ளான் நாய் மீட்புச் சம்பவத்தில் திருப்பம்: கால்நடைப் பராமரிப்புத் துறையிடமிருந்து இளைஞருக்குச் சம்மன்!

கோலாலம்பூர்:

தாமான் தெலுக் கெடோங் இண்டா பகுதியில் ‘ரோக்கி’ என்ற தெருநாயைப் பிடிக்கும் நடவடிக்கையின் போது ஏற்பட்ட அமளி துமளி தொடர்பில், 24 வயது இளைஞர் முஹமட் ஷா ஹிஸாம் வரும் வியாழக்கிழமை கிள்ளான் அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளார்.

இவ்விவகாரத்தை உறுதிப்படுத்திய சந்தேகநபரின் வழக்கறிஞர்களான முஹமட் ரஃபீக் ரஷீத் அலி மற்றும் மஹ்மூட் அப்துல் ஜுமாத் ஆகியோர், தங்களது கட்சிக்காரருக்குக் கால்நடைப் பராமரிப்புத் துறையின் (DVS) அதிகாரிகளால் சம்மன் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

“எங்களது கட்சிக்காரருக்குச் சம்மன் வழங்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துகிறோம். வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி காலை 9 மணிக்கு நாங்கள் நீதிமன்றத்தில் ஆஜராவோம்,” என அவர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும், அவர் மீது எந்தச் சட்டப் பிரிவின் கீழ் அல்லது எந்தச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

முன்னதாக, கிள்ளான் அரச மாநகரக் கழகம் (MBDK) மேற்கொண்ட தெருநாய்களைப் பிடிக்கும் நடவடிக்கையின் போது, ஒரு நாயைப் பிடிக்க முயன்றவேளை பெண் ஒருவர் தடுத்ததால் அங்கு கடும் அமளி ஏற்பட்டது. அந்தச் சம்பவத்தின் இறுதியில் ‘ரோக்கி’ என்ற அந்த நாய் உயிரிழந்தது.

கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முஹமட் ஷா, அந்த நடவடிக்கையின் போது அந்த நாயைக் காயப்படுத்தும் நோக்கத்திலோ அல்லது கொல்லும் நோக்கத்திலோ தான் அங்கு செல்லவில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here