கோலாலம்பூர்:
சிலாங்கூரில் உள்ள ஜோஹான் செத்தியா பகுதியில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, காற்று மாசடைவு குறியீடு (API) 157 ஆகப் பதிவாகி ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது.
சுற்றுச்சூழல் துறையின் தரவுகளின்படி, நாடு முழுவதிலும் உள்ள 64 காற்றுத் தர கண்காணிப்பு நிலையங்களில் மிதமான அளவிலான காற்றுத் தரமே பதிவாகியுள்ளது.
இந்நிலையில் கெடா மாநிலத்தில் உள்ள அலோர் ஸ்டார், லங்காவி மற்றும் பெர்லிஸ் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் ‘நல்ல’ நிலையில் தொடர்ந்து நீடிக்கிறது.
காற்று மாசடைவு குறியீட்டில் 0 முதல் 50 வரை நல்ல நிலைமையையும், 51 முதல் 100 வரை மிதமான நிலையையும், 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்ற நிலையையும், 201 முதல் 300 வரை மிகவும் ஆரோக்கியமற்ற நிலையையும் குறிக்கும். 300-க்கும் மேல் பதிவானால் அது அபாயகரமான நிலைகளாக வகைப்படுத்தப்படுகிறது.
நாடளாவிய ரீதியில் உள்ள 68 காற்றுத் தர கண்காணிப்பு நிலையங்களிலிருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் மணிநேரத்திற்கு ஒருமுறை API தகவல்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.






















