சையத் சாதிக் – பெல்லா அஸ்டிலா திருமணம் அக்டோபர் 10-இல் நடைபெறுகிறது: பிரபல தம்பதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கோலாலம்பூர்:

பிரபல மலேசியப் பாடகியும் நடிகையுமான பெல்லா அஸ்டிலா மற்றும் மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் ஆகியோரின் திருமணம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி சிறப்பாக நடைபெறவுள்ளது.

நேற்று ஒளிபரப்பான ‘MeleTOP’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தம்பதியர் இந்த நற்செய்தியை அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்து கொண்டனர்.

34 வயதான சையத் சாதிக் இத்திருமணம் குறித்துக் கூறுகையில், நாட்டின் மிகயுயர்ந்த கட்டிடமான Merdeka 118 கோபுரத்தின் 118-வது தளத்தில் இவர்களது நிக்காஹ் சடங்கு நடைபெறவுள்ளது. இக்கட்டிட உச்சியில் திருமணம் நடைபெறும் முதல் தம்பதி இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெற்றோரின் விருப்பத்திற்கு ஏற்ப வெள்ளை நிற ஆடைகளுடன் அரேபிய இஸ்லாமிய கலாச்சார முறையில் இத்திருமணம் நடைபெறவுள்ளது. ஒரே மாதத்தில் கோலாலம்பூர், முவார் மற்றும் சபா ஆகிய 3 முக்கிய இடங்களில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளன.

கடந்த மார்ச் 28 அன்று நிச்சயதார்த்தம் செய்து கொண்ட இந்த இணை, அக்டோபர் 10-ஆம் தேதியைத் தங்களின் வாழ்க்கைப் பயணத்தின் புதிய தொடக்கமாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

பெல்லா அஸ்டிலாவுக்கு ஏற்கனவே நடந்த திருமணத்தின் மூலம் அய்டன் (Ayden, 9) மற்றும் ஆரா (Ara, 6) ஆகிய இரு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

“இந்த அக்டோபர் மாதம் எங்கள் இருவருக்கும் குழந்தைகளுக்கும் ஒரு புதிய வாழ்க்கையின் தொடக்கமாக அமையும்,” என சையத் சாதிக் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here