“அரச மன்னிப்பு அதிகாரத்தை அரசியல் கருவியாக்க வேண்டாம்!” — புத்ரி அம்னோ பிரதிநிதிகள் மாநாட்டில் கோரிக்கை!

கோலாலம்பூர்:

மலேசிய மாமன்னர், மாநில ஆட்சியாளர்கள் மற்றும் மாநில ஆளுநர்களுக்குச் சொந்தமான அரச மன்னிப்பு அதிகாரத்தை அரசியல் ஆதாயங்களுக்கான கருவியாகப் பயன்படுத்தாமல், அந்த உயரிய அமைப்பை அனைவரும் மதிக்க வேண்டும் எனப் புத்ரி அம்னோ தலைவர் டத்தோ நூர் அமல் முகமட் பௌசி வலியுறுத்தியுள்ளார்.

இன்று நடைபெற்ற புத்ரி அம்னோ பிரதிநிதிகள் மாநாட்டில் (Perhimpunan Agung Puteri UMNO) தலைமை உரையாற்றிய அவர், கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 42-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள இந்த மன்னிப்பு அதிகாரம் நாட்டின் உயரிய சட்டத்திற்கு உட்பட்டது என்று சுட்டிக்காட்டினார்.

அரசியல் கருத்து வேறுபாடுகளுக்காக அரச நிறுவனங்களின் அதிகாரத்தைக் கொச்சைப்படுத்தவோ அல்லது இழிவுபடுத்தவோ கூடாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஜாஹிட் ஹமிடி உட்படப் பல முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்ட இம்மாநாட்டில், இளம் பெண்களின் முன்னேற்றம் குறித்தும் நூர் அமல் முக்கிய கோரிக்க முன்வைத்தார்:

“அரசாங்க இணைப்பு நிறுவனங்கள் (GLC) மற்றும் உள்ளூர் அதிகார அமைப்புகளில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட முக்கியப் பதவிகளில், இளம் பெண்களுக்கு 30 சதவீதப் பிரதிநிதித்துவ வாய்ப்புகளை வழங்க வேண்டும்,” எனக் கேட்டுக்கொண்டார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் மதிப்புகளைப் பாதுகாப்பதோடு, நாட்டின் நிர்வாகத்தில் இளம் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் இம்மாநாட்டின் வழி புத்ரி அம்னோ வலியுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here