கோலாலம்பூர்:
சமூக ஊடகங்கள் மூலம் பெண்களின் புகைப்படங்களை விளம்பரப்படுத்தி, அதன் மூலமாக விபச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் கும்பலை குடிநுழைவுத் துறையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு 11 மணி முதல் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனையில், பாகங் மாவட்டத்தைச் சுற்றியுள்ள 17 கேளிக்கை விடுதிகளில் சோதனை செய்யப்பட்டன என்று, குடிவரவுத் துறையின் (JIM) துணை இயக்குநர் ஜெனரல் (செயல்பாடுகள்), ஜாஃப்ரி எம்போக் தாஹா கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டுப் பெண்கள், வாடிக்கையாளர்கள் வழங்கப்பட்ட அறைகளுக்குச் செல்வதற்கு முன், வளாகத்தின் பராமரிப்பாளர்களாக நம்பப்படும் உள்ளூர் ஆண்களால் அவர்களுக்குரிய அறைகள் நிர்வகிக்கப்படும் என்றும், அவர்களிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் பேக்கேஜைப் பொறுத்து RM300 முதல் RM400 வரை கட்டணம் அறவிடப்படுகிறது என்றும் அவர் சொன்னார்.
இந்த நடவடிக்கை மூலம் 120 வெளிநாட்டுப் பெண்கள் கைதாகியுள்ளனர் என்றும், அவர்கள் தாயலாந்து, மியன்மார், லாவோஸ், வியாட்நாம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்களாவார்.
சோதனை நடத்தப்பட்ட 17 கேளிக்கை மையங்களின் உரிமையாளர்களையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் குடிநுழைவுத்துறை ஈடுபட்டுள்ளதாகவும், இவ்வாறான ஒழுக்கக் கேடான செயலில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல் உள்ளவர்கள் அதிகாரத்தரப்பிற்கு தகவல் தருமாறு அவர் கூறினார்.





















