சிங்கப்பூர்:
சிங்கப்பூர் பிரதமராக இருந்த லீ சியென் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, துணை பிரதமராக இருந்த லாரன்ஸ் வோங் நேற்று சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பதவியேற்றார்.
இஸ்தானாவில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம், தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் முன்னிலையில் வோங் பிரதமராக உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
அப்போது, நாட்டின் பிரதமராக எல்லா நேரங்களிலும் உண்மையாகக் கடமையாற்றுவேன் என்றும், தன்னாலான அளவிற்குச் சிறந்த முறையிலும், அச்சமின்றியும், பாகுபாடின்றியும், விருப்புவெறுப்புகளுக்கு இடமின்றியும் கடமையாற்றுவேன் என்றும் அவர் கூறினார்.
இஸ்தானா திடலில் நடைபெற்ற பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்கவாதிகள், தொழில்துறைத் தலைவர்கள், விளையாட்டாளர்கள், கலைஞர்கள், சமூகத் தொண்டூழியர்கள், முன்களப் பணியாளர்கள் என கிட்டத்தட்ட 900 பேர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.





















