கோலாலம்பூர்:
GISBH எனப்படும் குளோபல் இக்வான் சர்வீசஸ், பிஸ்னஸ் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் மீது நடத்தப்பட்டு வரும் புலன்விசாரணையில் கண்டிப்பாக எவ்வித சமரசத்திற்கும் தாம் இடமளிக்கப் போவதில்லை. இதனால் தம்முடைய பிரதமர் பதவி இழக்க நேர்ந்தாலும் கவலை இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக கூறினார்.
எவ்வித பாரபட்சமும் இன்றி சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு GISBH மீதான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
அதன் சமூகநல இல்லங்களில் நிகழ்ந்திருக்கும் அட்டூழியங்கள், சிறார்கள் துன்புறுத்தல் என பல்வேறு குற்றச்செயல்களுக்காக போலீஸ் அதிரடியாக புலன்விசாரணையை நடத்திவருகிறது.
இந்த புலன்விசாரணை நியாயமாகவும் ஆழமாகவும் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில் போலீஸ் உள்ளிட்ட அமலாக்கப் பிரிவுகள், ஜாக்கிம் எனப்படும் மலேசிய இஸ்லாம் மேம்பாட்டு இலாகா ஆகியவற்றின் மீது பொது மக்கள் அதீத நம்பிக்கை வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.




















