ஷா ஆலம்:
டத்தோஸ்ரீ அஸ்மின் அலிக்கு எதிராக தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் வான் சைப்பூல் வெளியிட்ட கருத்திற்கு பெர்சத்து கட்சியை சேர்ந்த சிலாங்கூர் மாநிலத்தின் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக சிலாங்கூர் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரான அஸ்மின் அலியின் அந்த பழைய குற்றச்சாட்டு குறித்த அமலாக்க தரப்பினரின் விசாரணை கடந்த 2020ஆம் ஆண்டே முற்று பெற்றுவிட்டது. எனவே வான் சைப்பூல், அவரின் சகாக்களின் தற்போதைய நடவடிக்கை பொறுப்பற்றது மட்டுமின்றி “போர்வைக்கு ஒளிந்து கொண்டது” போன்றது என அந்த 10 சட்டமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதிலும் அனைத்து ஆதாரங்கள், வாக்குமூலங்களை விசாரித்த பின் அஸ்மின் அலிக்கு எதிரான குற்றச்சாட்டு அடிப்படையற்றது என அப்போதே சட்டத்துறை தலைவர் உறுதிப்படுத்தியிருந்தார். ஆனாலும் தங்களின் சத்திய பிரமாண முயற்சி தோல்வி அடைந்ததும் வான் சைப்பூல் தற்போது உண்மையை மாற்றப் பார்க்கின்றார் இன்னும் சொல்லப் போனால் மில்லியன் கணக்கிலான பணம் முறைகேடு விவகாரத்தில் வான் சைப்பூல்தான் தற்போது நீதிமன்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார். நியாயப்படி அவர்தான் தம்மீதான குற்றச்சாட்டிற்கு பதில் கூற வேண்டுமே தவிர மற்றவர்கள் மீது வீண் பழி சுமத்தக் கூடாது.
எனவே கட்சி ஒழுங்கு நடவடிக்கை பிரிவு உடனடியாக அவர் மீது விசாரணை மேற்கொண்டு கடும் நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். குவாங், சுங்கை கண்டீஸ், தாமான் மேடான், மோரீப், கோம்பாக் செத்தியா, ஜெராம், டெங்கில், தாமான் மெலாவாத்தி, பாத்தாங் காலி, பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது. என்றும் அவர்கள் சாடினர்.























