MACC சோதனையின் CCTV காட்சிகளை வெளியிடுங்கள்: தொழிலதிபர் ஆல்பர்ட் தேய் கோரிக்கை

கோலாலம்பூர்:

னது வீட்டில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) நடத்திய சோதனையின் போது எடுக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளைப் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று தொழிலதிபர் ஆல்பர்ட் தேய் (Albert Tei) கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த நவம்பர் 28-ஆம் தேதி தனது வீட்டில் நடந்த சோதனையின் போது, MACC அதிகாரிகள் தன் மீதும் தனது குடும்பத்தினர் மீதும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக ஆல்பர்ட் தேய் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக செப்பாங் மாவட்டப் போலீஸ் தலைமையகத்தில் இன்று (டிசம்பர் 24) அவர் தனது வாக்குமூலத்தை அளித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில்: “போலீஸார் இன்றுடன் சேர்த்து என்னிடம் நான்கு முறை வாக்குமூலம் பெற்றுள்ளனர். எனது மனைவி, மாமியார் மற்றும் வீட்டுப் பணிப்பெண் ஆகியோரிடம் கடந்த வாரம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த CCTV பதிவுக் கருவி இப்போது எங்கே இருக்கிறது? சோதனையின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் எப்போது வெளியிடப்படும்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிலாங்கூர் மாநிலப் போலீஸ் தலைமை ஆணையர் டத்தோ ஷாசெலி கஹார் (Datuk Shazeli Kahar), MACC அதிகாரி துப்பாக்கி காட்டி மிரட்டியதாகக் கூறப்படும் புகாருக்கு இன்னும் வலுவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி தெரிவித்திருந்தார்.

இருப்பினும், சோதனையில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்த மொபைல் போன் பதிவுகள் மற்றும் CCTV காட்சிகள் தடயவியல் ஆய்வுக்காக (Forensic analysis) அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆல்பர்ட் தேயின் வழக்கறிஞர் சையத் மாலிக் கூறுகையில், அதிகாரிகள் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்ததாகவும், தேய்க்கு விலங்கு மாட்டியதுடன் சட்ட ஆலோசனைகளைப் பெறவும் அனுமதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி, ஆல்பர்ட் தேய் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நான்கு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இவருடன் முன்னாள் மூத்த அரசியல் செயலாளரான டத்தோஸ்ரீ ஷம்சுல் இஸ்கந்தர் முகமட் அகியும் கையூட்டு பெற்ற வழக்கில் கைதானது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு தொடர்பாக ஆல்பர்ட் தேய் தான் குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் வாதிட்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here