கோலா கிராய் | ஏப்ரல் 3, 2026
கிளாந்தான், கோலா கிராய் சென்ட்ரல் பார்க் (Central Park) பகுதியில் உள்ள சீன சமய வழிபாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் கடந்த புதன்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கித் தம்பதியினர் இருவர் பலத்த தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த புதன்கிழமை இரவு சுமார் 8:30 மணியளவில் இந்தக் கடையில் திடீரெனத் தீப்பிடித்தது. வழிபாட்டுப் பொருட்கள் அதிகளவில் இருந்ததால் தீ மளமளவெனப் பரவி கடை முழுவதும் சூழ்ந்தது.
தகவல் கிடைத்ததும் கோலா கிராய் மற்றும் சுங்கை டுரியான் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 21 வீரர்கள் 3 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
தீயணைப்புப் படையினர் கடுமையாகப் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், அதற்குள் அந்தக் கட்டடம் சுமார் 90 விழுக்காடு தீயினால் முழுமையாகச் சேதமடைந்தது.
இந்த விபத்தில் சிக்கிய கடை உரிமையாளர்களான தம்பதியினர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாகச் சுல்தான் இஸ்மாயில் பெத்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீ விபத்தின் போது பயங்கர வெடிச் சத்தம் கேட்டதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். கடையில் இருந்த வெடிபொருட்கள் வெடித்ததா அல்லது மின்கசிவு காரணமா என்பது குறித்துத் தீயணைப்புத் துறையின் தடயவியல் நிபுணர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தினால் ஏற்பட்ட சொத்து சேதங்களின் மதிப்பு இன்னும் முழுமையாகக் கணக்கிடப்படவில்லை.





















