ஜார்ஜ் டவுன், ஜூலை 11:
உறைந்த கோழி இறைச்சிகளை ஏற்றிய லோரி பிராயின் வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் செபெராங் ஜெயா அருகே ஆற்றில் விழுந்ததால் லோரி ஓட்டுநர் இன்று நண்பகல் மரணமடைந்தார்.
விபத்து நடந்த இடத்திலிருந்து சற்றுத் தூரத்திலுள்ள சுங்கை தெர்ஹாக்காவில் ஓட்டுநரின் உடல், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மரணமடைந்த லோரி ஓட்டுநர் யார் என்ற அடையாளம் மற்றும் வயது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், செபெராங் ஜெயா மசூதி அருகே லோரி ஒன்று காருடன் விபத்துக்குள்ளாகி நண்பகல் 1.30 மணியளவில் ஆற்றில் விழுந்தததாக கூறினார்.
லோரியில் பயணம் செய்த சக ஓட்டுநர் வழியில் சென்றவர்களால் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டார்.
பிராய் தீயணைப்பு நிலைய வீரர்களின் தொடர்ச்சியான தேடுதலால் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு மரணமடைந்த ஓட்டுநரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இறந்தவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செபெராங் ஜெயா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. மக்களால் மீட்கப்பட்ட இணை ஓட்டுநரும் அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.