துப்பாக்கிச் சூடு விபத்து: டத்தோ டான் லேக் காங் நினைவு திரும்பினார்!

கோலாலம்பூர்:

வறுதலாகத் தன்னைத் தானே சுட்டுக் கொண்டதில் படுகாயமடைந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜோகூர் பெர்சத்து கட்சியின் முன்னாள் இணைத் தலைவர் டத்தோ டான் லேக் காங், தற்போது நினைவு திரும்பியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி, கோத்தா திங்கியில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் பயிற்சியை முடித்த பிறகு, தனது கைத்துப்பாக்கியைச் சுத்தம் செய்த போது எதிர்பாராதவிதமாக குண்டு பாய்ந்ததில் அவர் படுகாயமடைந்தார்.

சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், தற்போது பேசும் நிலைக்கு முன்னேறியுள்ளதாகப் பெர்சத்து கட்சியின் தகவல் பிரிவு தலைவர் பீட்டர் கூ கொங் எக் உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், உடல்நிலை இன்னும் பலவீனமாக இருப்பதால் அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜோகூர் மாநிலக் காவற்படைத் தலைவர் டத்தோ அப் ரஹ்மான் அர்சாத் கூறுகையில், இச்சம்பவம் குறித்து இதுவரை ஒன்பது சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். காவல்துறை இச்சம்பவத்தை விபத்தாகக் கருதித் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு டத்தோ டான் லேக் காங் நினைவு திரும்பியுள்ளது அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் முழுமையாகக் குணமடைய வேண்டும் எனப் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here