கண்காட்சி திடலில் ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்து வியாபாரி பலி: இருவருக்கு விளக்கமறியல்!

சுங்கை பட்டாணி:

இங்குள்ள டத்தாரான் ஜாம் பெசார் (Dataran Jam Besar) அருகே நடைபெற்ற வணிகக் கண்காட்சித் திடலில், நேற்று இரவு ஏற்பட்ட ஹீலியம் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக இருவர் போலீஸ் காவலில் (Remand) வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள 38 வயதுடைய வியாபாரிக்கு இன்று முதல் 4 நாட்களும், 18 வயதுடைய இளைஞனுக்கு 1 நாளும் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளதாக கோலா மூடா மாவட்டக் காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் (ACP) ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேக நபர்களும் கோலா கெடாவைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களுக்கு முன் குற்றப் பின்னணி எதுவும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் இவர்கள் இருவரும் பலூன்களுக்கான ரசாயனப் பொருட்களைக் கலந்து கொண்டிருந்தபோதுதான் இந்த விபத்து நேர்ந்துள்ளது. அதன் அடிப்படையிலேயே அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

நேற்று இரவு 7.53 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் குறித்து போலீசாருக்கு அவசர அழைப்பு கிடைத்தது. குழந்தைகளுக்கான விளையாட்டு பலூன்களில் நிரப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த ஹீலியம் கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில், அங்கிருந்த அஸ்மி அகமட் (வயது 42) என்ற வியாபாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், சிலிண்டர் வெடித்ததில் சிதறிய இரும்புத் துகள்கள் (Shrapnel) பாய்ந்து அங்கிருந்த மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர். பலியானவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பாஹியா மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து தண்டனைச் சட்டம் பிரிவு 304A-இன் கீழ் (அலட்சியத்தால் மரணம் விளைவித்தல்) போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்காட்சி தற்காலிக மூடல்: இந்த விபத்தைத் தொடர்ந்து, கடந்த மே 20 முதல் மே 26 வரை நடைபெறவிருந்த இந்த வணிகக் கண்காட்சி (Expo), போலீசாரின் முறையான விசாரணைக்கு வழிவகுக்கும் பொருட்டு தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்களைக் கையாளும்போது போதிய பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாததே இந்தத் துயரத்திற்கு வழிவகுத்துள்ளது எனத் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here