அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு ‘புரோஸ்டேட்’ எனும் ஆண் சுரப்பி புற்றுநோய் இருப்பதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தப் புற்றுநோய் 82 வயது பைடனின் எலும்புகளுக்குப் பரவியுள்ளது என்று கூறப்படுகிறது.
இவ்வாண்டு ஜனவரியில் அதிபர் பதவிக்காலம் முடிந்து திரு பைடன் கடந்த வெள்ளிக்கிழமை (மே 16) மருத்துவரைச் சந்தித்தபோது புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது.
அந்தப் புற்றுநோய் கடுமையான ஒன்று என வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பைடனுக்கு உள்ள புற்றுநோய் துரிதமாகப் பரவக்கூடியது என்று பிரிட்டிஷ் புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு குறிப்பிட்டது.
பைடனும் அவரது குடும்பமும் சிகிச்சைக்கான வாய்ப்புகள் குறித்து ஆராயவிருக்கின்றனர். முன்னாள் அதிபர் பைடனின் அலுவலகம் அவரது புற்றுநோய் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்படலாம் என்று சொன்னது.
பைடனின் அறிவிப்பை அடுத்து தாமும் தமது துணைவி மெலனி டிரம்ப்பும் கவலையுற்றதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் தமது ட்ருத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டார்.
“பைடன் துரிதமாகவும் வெற்றிகரமாகவும் குணமடைய வேண்டுகிறோம்,” என்று டிரம்ப் குறிப்பிட்டார்.




















