கோலாலம்பூர், மார்ச்.17-
கோவிட் 19 நோய்த்தொற்றினால் பலருக்கு வேலை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மூன்று மாதம் வரை விடுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சி இல்லாத மகிழ்ச்சி.
மாதச் சம்பளம் பெறுவோருக்கு எந்தப்பாதிப்பும் இல்லை. பாதிப்பு என்றலும் பெரிதாக வருத்தப் படுவதற்கில்லை. அலுவலகம் போகவேண்டியதில்லை. குடும்பத்தோடு பொழுதைக்களிக்கலாம். வெளியில் சென்று உணவருந்த வேண்டிய கட்டாயம் இல்லை. கார்களை நகர்த்த வேண்டியதும் இருக்காது.
இது சாதகமா, பாதகமா?
பாதிப்புகள் என்பது தொற்று வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆலோசனைகளைப் பின்பற்றினாலே போதும். மாதச்சம்பளக்காரர்களுக்கு இவையெல்லாம் ஒரு பொருட்டல்ல.
நாள் வருமானம் தேடும் சாதாரண மக்களின் நிலைமை மோசமடைந்துவிடும் என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.
இவர்களுக்கு விடுமுறை என்பது தெரியாது. உழைத்தால்தான் வருமானம். அன்றாட வருமானம்தான் சாப்பாட்டுக்கு வழி.
கட்டாய விடுமுறை இவர்களுக்கு இழப்பையே ஏற்படுத்தும். இதை எப்படிச் சாமாளிக்கப்போகிறார்களோ என்ற சோகக்குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது.
அன்றாட வருமானம் பெறுகின்றவர்கள் அல்லல்படத்தான் போகிறார்கள் என்கிறார் எம்.முனியாண்டி. அன்றாட சிறு வியாபாரம் முற்றாகப் பாதிக்கும். தினச் செலவுகளுக்கு பெரிய தட்டுப்பாடு நிலவும். இவற்றை எல்லாம் சமாளிக்க அன்றாடக் காய்ச்சிகளால் அறவே முடியாது என்கிறார் அவர்.