புத்ராஜெயா –
கொரோனா வைரஸ் பீதியால் பொதுமக்கள் பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டிய அவசியமில்லை என்று அரசாங்கம் நினைவுறுத்தியது. மலேசியர்கள் அமைதியுடன் இருக்க வேண்டும். எல்லாருக்கும் போதுமான உணவு இருக்கும் என்று பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் நேற்று உறுதியளித்தார்.
கவலைப்படாதீர்கள். எல்லா இடங்களிலும் போதுமான உணவு இருக்கும் என்று அவர் சொன்னார். நேற்று நடைபெற்ற பொருளாதார நடவடிக்கை மன்றத்தின் கூட்டத்திற்குப் பிறகு அவர் நிருபர்களிடம் பேசினார்.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகம் போதுமானதாக இருப்பதை உறுதிப்படுத்தும்படி உள்நாட்டு வர்த்தக கூட்டுறவு பயனீட்டாளர் நலத்துறை அமைச்சுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
மக்களிடையே ஒருவித பீதி பரவியிருப்பது எனக்குத் தெரியும். உணவுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுவிடுமோ என்ற கவலையும் மக்களுக்கு உள்ளது என்பதை நான் அறிவேன். ஆனால் பயப்படத் தேவையில்லை. எல்லாருக்கும் போதுமான உணவு நிச்சயம் இருக்கும்.
உணவு விநியோகம் தீர்ந்து விடும் என்பதற்கான அறிகுறி ஏதும் இல்லை. ஆகவே பீதியால் பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டாம். தேவையானதை மட்டும் வாங்குங்கள். எல்லா நேரத்திலும் மக்களுக்குப் போதுமான உணவு இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம் என்றார் அவர்.