கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், நிதியமைச்சர் பதவியை வகிப்பதற்கு சிறந்தவர் என ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சகத்தை வழிநடத்தும் ஒரு தனிநபருக்கு நிர்வாகம் மற்றும் கொள்முதல் ஆகியவை வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை உறுதிசெய்யும் மிகப்பெரிய பொறுப்பு இருப்பதால், நிதியமைச்சராக இருப்பதற்கு தகுதியான சிறந்த நபர் பிரதமர் தானே என்று, பொருளாதார அமைச்சர் இன்று மக்களவையில் கூறினார்.
மக்களவையில் நடந்த கேள்வி பதில் நேரத்தின்போது, நாட்டின் பொருளாதார மீட்சியின்மை குறித்து சில ஆய்வாளர்களும் மக்களும் கவலையுடன் இருப்பதால், பிரதமர் முழுநேர நிதி அமைச்சரை நியமிப்பது என்பது சரியானது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா என்று, டான்ஸ்ரீ முஹிடின் யாசின் (PN-Pagoh) கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாகவே ரஃபிஸி அவ்வாறு தெரிவித்தார்.
இந்நிலையில் ரஃபிசியின் கருத்துக்கள் எதிர்க் கட்சியினரிடமிருந்து எதிர்ப்பைத் தூண்டியது, சிலர் “அப்படியானால் உங்கள் அறிக்கையை மாற்றிக் கொள்ளுங்கள்” என்று கூச்சலிட்டனர்.
ஏனெனில் கடந்த காலத்தில், 1MDP தொடர்பான சர்ச்சையின் போது, குறிப்பாக அப்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் காலத்தில், நிதியமைச்சர் பதவிக்கு பிரதமர் தெரிவுசெய்வது தொடர்பில் ரஃபிஸி வலுவான எதிர்ப்பாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.