கோலாலம்பூர்:
எதிர்வரும் ரமலான் மாதத்தில் உள்ளூர் சந்தைகளில் கோழி மற்றும் முட்டை விநியோகம் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மலேசிய வேளாண் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகம்மது சாபு தெரிவித்துள்ளார்.
அமைச்சகத்தின் தற்போதைய தரவுகளின்படி, கோழி மற்றும் முட்டையின் இருப்பு நிலையாக உள்ளது. இது மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இருக்கும் என்றார்.
சந்தையில் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முக்கியக் காரணமான ‘உணவுக் கடத்தலை’ (Smuggling) தடுக்கப் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
மேலும் இறக்குமதி செய்யப்படும் கோழிகளுக்கும் உள்ளூர் உற்பத்திக்கும் இடையே ஒரு சமநிலையை பராமரிப்பதன் மூலம் விலையைத் தற்காக்கவும், உள்ளூர் விவசாயிகளின் வருமானத்தைப் பாதுகாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.





















