நடிகர் அஜித் மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் நடித்து வரும் படம் வலிமை. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வரும் வலிமை படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி ஹீரோயினாக நடிக்கிறார்.
முதல்கட்ட படப்பிடிப்பை தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் செட் போட்டு படமாக்கினார் வினோத். அங்கு ஸ்டண்ட் காட்சிகளை முதலில் படமாக்கியதாக தெரியவந்தது. அதன் பிறகு சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சனை தலைதூக்கியது.
இதையடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நான்கு முறை நீட்டிக்கப்பட்டது. நான்காவது ஊரடங்கு உத்தரவு வரும் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன் பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்கிற கவலையில் பலர் உள்ளனர்.
ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சின்னத்திரை ஷூட்டிங்கை மீண்டும் துவங்க தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால் செட்டில் மொத்தமே 20 பேர் தான் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. படங்களின் ஷூட்டிங் எப்பொழுது துவங்கும் என்று தெரியவில்லை. இதனால் வினோத் தனது திட்டத்தை மாற்றியுள்ளதாக கூறிப்பிடத்தக்கது.
அஜித் நடிக்கும் கார் மற்றும் பைக் ரேஸ் காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்க திட்டமிட்டிருந்தார் வினோத். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை தற்போதைக்கு முற்றிலும் தீர்வதாக இல்லை. இதனால் திட்டமிட்டபடி வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்துவது கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, திரைக்கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி இந்தியாவிலேயே படப்பிடிப்பை நடத்தி முடிக்க வினோத் திட்டமிட்டுள்ளார் என்று தெரியவந்தது. லாக்டவுன் முடிந்த பிறகு வலிமை பட ஷூட்டிங்கை துவங்குகிறார்களாம்.
வலிமை குறித்து ஏதாவது அப்டேட் கிடைக்காதா என்று ஏங்கும் அஜித் ரசிகர்களுக்கு இந்த தகவல் நிச்சயம் கொஞ்சம் உற்சாகத்தை அளிக்கும்.