எம்சிஓ எனப்படும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதாக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அவருக்கு எதிராக நடவடிக்கை எதும் இல்லை என்று அறிவிகப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் போலீசார் என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்ததாக பிரபாகரன் ஓர் அறிக்கை வாயிலாக கூறினார். இதற்காக் போலீசாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கோவிட் 19 தாக்கத்தினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பத்து நாடாளுமன்றத் தொகுதியில் சிரமப்படும் மக்களுக்காக பத்து தொகுதி கெஅடிலான் சேவை மையத்தின் மூலம் பொருள் உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் செலாயாங் பாசார் போரோங்கில், தாமான் முர்னியில் கோவிட் 19 தாக்கத்தினால் முள்வேலிக் கம்பிகள் அமைக்கப்பட்டன. ஊரடங்கு விதிக்கப்பட்ட இந்தப் பகுதியில் எம்சிஓ உத்தரவை மீறி ஏப்ரல் 20ஆம் தேதி பிரபாகரன் தாமான் ஸ்ரீமுர்னி குடியிருப்புக்கு வந்ததால் கைது செய்யப்பட்டார்.
பொதுமக்களுக்கு உதவச் சென்ற பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செந்தூல் போலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்ட பிரபாகரனிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர். ஆனால் இப்போது அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான முறையில் உதவிகள் வாங்க ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றபோது இவர் கைது செய்யப்பட்டதை கூட்டரசுப் பிரதேச கெஅடிலான் இளைஞர் பிரிவு கடுமையாக கண்டித்தது.
எஸ்ஓபி விதியை மீறி நான் நடந்துக் கொண்டதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. ஆனால் என் தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு உதவி செய்யவே நான் அங்கு சென்றேன் என பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார்.