“அம்பாங் மைய நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வங்காளதேச கடப்பிதழ் மையத்தால் பெருந்தொல்லைகள் ஏற்பட்டு வருகிறது என மலேசியாவில் வசிக்கும் வங்காளதேசிகளுக்கு எதிராக அம்பாங் குடியிருப்புவாசிகள் போர்கொடி உயர்த்தியுள்ளனர்“.
வங்காளதேச கடப்பிதழ் மையத்தை வேறு பகுதிக்கு மாற்றுக் கொள்ளுமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடப்பிதழ் விண்ணப்பம் மற்றும் புதுப்பிப்பு காரணமாக அதிகமான வங்காளதேசிகள் நாடு முழுவதிலுமிருந்து இங்கே குழுமி வருகிறார்கள்.
திருவிழாக் கோலம் கண்டது போல அம்பாங் இவர்கள் வருகையால் மாறி வருகிறது. கோவிட் கால கட்டுப்பாட்டை இவர்கள் கடைபிடிப்பதில்லை என்பதுதான் இவர்களுக்கு எதிரான முக்கிய கோஷமாக எழுப்பப்படுகிறது.
கூச்சல் போடுவது, பொதுமக்கள் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வது, பொது சுகாதாரத்தைப் பேணாதது போன்ற தொல்லைகள் இங்கே தொடர்ந்து வருகின்றன.
அமலாக்க அதிகாரிகள் இப்பகுதிக்கு வந்து இவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும். கடப்பிதழ் மையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும்.
அடிக்கடி நேர்ந்து வரும் போக்குவரத்து நெரிசலையும் சீர்படுத்தித் தரவேண்டும்.
ஒவ்வொரு நாளும் இவர்கள் வரிசை பிடித்து நிற்பதும் கண்டபடி
கூச்சலிடுவதும் நற்செயலாகத் தெரியவில்லை.
கோவிட் காலத்தில் அம்பாங்வாசிகள் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டாலும் வந்து குவியும் வங்காளதேசிகளால் மக்களுக்கு பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டு வருகின்றன.
அதிகமான வங்காளதேசிகள் குவிவதால் நாளுக்கு நாள் அவர்களின் கடைகளும் இங்கே பெருகி வருகின்றன. சுகாதாரமற்ற நிலையில் உணவகங்களும் மளிகைக் கடைகளும் இயங்கி வருகின்றன.
திங்கட்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் அவர்கள் அதிகமாக இங்கு வருகிறார்கள். இதன் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சகித்துக் கொள்ளவே முடியவில்லை.
மலேசிய வியாபாரிகள் பல முறை புகார் கொடுத்தும் முறையான நடவடிக்கை இல்லை. எனவே இங்கு உள்ள வங்காளதேச கடப்பிதழ் மையத்தை வேறு இடத்திற்கு மாற்றி அம்பாங் மக்களுக்கு நன்மை செய்ய மக்கள் பிரதிநிதிகளும் அம்பாங் நகராண்மைக் கழகமும் முன்வரவேண்டும் என குடியிருப்பாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.