தோக்கியோ –
நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பு மருந்து வழங்குவது குறித்து ஜப்பான் அரசு ஆலோசனை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக அரசுக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி சின்ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கொரோனா வைரசின் தீவிரமான தொற்றும் தன்மை மற்றும் கடுமையான நோய் அறிகுறிகள் உள்ளவர்களை விரைவில் மரணிக்க வைக்கும் தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கூடுமானவரை அதிகமான மக்களுக்கு நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் தடுப்பு மருந்தினை வழங்க ஜப்பான் அரசு விரும்புகிறது.
இதற்காக கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டமொன்றில் தற்போது பதவியை ராஜிநாமா செய்துள்ள பிரதமர் சின்ஷோ அபே கூறுகையில், ‘கொரோனா வைரசை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் மற்றும் செயல்திட்டங்களின்படி 2021-ஆம் ஆண்டின் முதல் பாதிக்குள் நாட்டிலுள்ள அனைவருக்கும் தேவையான அளவு தடுப்பு மருந்துகளை கொள்முதல் செய்வதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 20121 மார்ச்சில் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் ஒதுக்கபட்டுள்ள நிதி ஆதாரங்கள் பயன்படுத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு நோய்த்தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் அஸ்ட்ரா செனேகா மற்றும் ஜெர்மனியின் பிசர் ஆகிய நிறுவனங்களுடன் இதற்கென ஜப்பான் அரசு சார்பில் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.