புரட்டாசி மாதம் என்றாலே மகாவிஷ்ணுவுக்குரிய மாதம்.
அதனாலேயே இந்த மாதம் புனித மாதம். வைணவ ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். வைணவர்கள் மட்டுமல்ல இந்து சமயத்தினர் அனைவரும் பெருமாளுக்கு விரதம் இருக்கும் மாதம் இந்த புரட்டாசி மாதம்.
நம் புத்தியை சீர்ப்படுத்தும் புதபகவானுக்குரிய கன்னி ராசியில் சூரியன் இருப்பது இந்த மாதத்தில்தான். அம்பிகைக்கு நவராத்திரி கொண்டாடப்படுவதும், கொழுவைத்து அம்பிகையை வீட்டிற்கு அழைத்து பூஜை செய்வதும் இந்த மாதத்தில்தான்.
எத்தனை வழிபாடுகள் செய்தாலும் நீத்தார் கடன் இருப்பின் எந்த காரியமும் நல்ல முறையில் நடத்த முடியாது. சங்கடங்களும், சச்சரவுகளும் நம்மை சூழ்ந்திருக்கும். அதற்கேற்ப நம் முன்னோர்களின் திதி மற்றும் தேதியை மறந்தவர்களுக்காக மகாளய பட்சம் அமையும் மாதம். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையை தான் மகாளய அமாவாசை என்பர். மகாளய பட்சம் 15 நாட்களும் முன்னோர்களுக்காக விரதமிருந்து சிரார்த்தம் செய்பவர்கள் உண்டு.
இதனைப் பெற்றுக் கொண்டு நம் மூதாதையர்கள் நம் நலவாழ்விற்காக விஷ்ணுவிடம் நேரடியாக கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள் என்பது ஆன்றோர் வாக்கு. இத்தனை சிறப்புக்களைக் கொண்டுள்ள புரட்டாசி மாதத்தில் விஷ்ணுவை வழிபடுவோம். நலம் பெறுவோம்.