பழைய புத்தியில் புதிய உத்தி!
நம்பிக்கை என்று வந்துவிட்டால் எவர் சொன்னாலும் காதில் ஏறாது என்பார்கள் . கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்றும் கேள்விப்பட்டிருக்கலாம், அதைவிட கழுதைப்பாலில் நோயெதிர்ப்புச் சக்தி நிறைந்திருக்கிறது என்பதையும் மக்கள் நம்பத் தொடங்கி விட்ட கதையும் பரவலாகிவிட்டது.
இனி கழுதைக்கும் வாழ்வு வந்துவிடும் என்பதால் யாரையும் கழுதை என்று திட்டக்கூடாது என்பதை மறந்து விட வேண்டாம். கழுதையைக் கண்டால் கைகூப்பி வணங்கும் காலம் வந்துவிட்டது என்பதற்கு காரணம் இருக்கிறதே!
கொரோனா வைரஸை விரட்டும் சக்தி கழுதைப்பாலில் இருக்கிறது என்றும் மக்கள் நம்புவதால் தருமபுரியில் பால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
கொரோனா வைரஸ் உலகிற்கு கற்பித்த படிப்பினை கொஞ்ச நஞ்சமல்ல. அந்த அளவுக்கு எல்லா வகையிலும் அனுபவம் தந்துள்ளது. வைரஸ் பரவத் தொடங்கிய காலகட்டத்தில் எந்தப்பகுதியில் எவ்வளவு நேரம் வீரியமாக இருக்கும் என்றெல்லாம் ஆய்வு செய்யப்பட்டது.
ஆனால் தற்போது அதனை விரட்டுவது தான் முதன்மை வேலை எல்லோரும் செயல்படுகின்றனர். அதற்காக சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுகளை மக்கள் சாப்பிட தொடங்கியுள்ளனர்.
சளி, இருமல், காய்ச்சல் ஆகிய பிரச்சினைகளை கழுதைப்பால் உடனே குணப்படுத்தும் என்று சொல்லியும், கொரோனாவை விரட்டக் கூடிய அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது என்றும் கழுதைப் பால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
கழுதையுடன் வீடு வீடாக சென்று அங்கேயே பாலை கறந்து கொடுத்து வருகின்றனர். ஒரு டம்ளர் 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனையாகிறது.
கொரோனா விரட்டுகிறது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது என்று மக்கள் நம்புவதால் பலரும் நூறு ரூபாய் கொடுத்து பால் வாங்குகின்றனர்.
வீட்டில் யாரேனும் கழுதை வளர்த்தால் களவு போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.