இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த சிங்கப்பூரின் “எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ என்ற சரக்குக் கப்பலில் நேற்று (மே25) மீண்டும் தீப்பரவல் ஏற்பட்டது. இரசாயன மற்றும் அழகுசாதன திரவியங்கள் அடங்கிய கொள்கலங்களுடன் பயணித்த இக் கப்பல் கடந்த மே 20 ஆம் தேதி கொழும்பு துறைமுகத்துக்குள் பிரவேசிப்பதற்கு முன்னதாகவே தீப்பற்றியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் தீப்பற்றிக்கொண்ட கப்பலில் இருந்து 08 சரக்குக் கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளன. இந்தக் கொள்கலன் கப்பலில் பிலிப்பைன்ஸ், சீன, இந்திய மற்றும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 25 ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் கூறியுள்ளார்.
இதேவேளை, குறித்த கப்பல் இரண்டாக உடையும் அபயாம் இருப்பதாக கடற்படை நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக இலங்கை சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.