தீயணைப்புச் சாதனங்களில் போதைப்பொருட்களை மறைத்து வைத்து, குளிரூட்டப்பட்ட லாரிகளின் மூலம் சிங்கப்பூருக்கு அனுப்பும் போது போலீஸாரின் சோதனையின் போது பிடிபட்டதாக ஜோகூர் மாவட்ட போலிஸ் தலைவர் அயோப் கான் மைதீன் பிச்சை தெரிவித்தார்.
சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மலேசியாவின் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத்துறை மற்றும் ஜோகூர் போலிஸ் துறை ஆகியோரிடம் இந்த கடத்தல் குறித்த தகவலை உளவுத்துறை தெரிவித்ததையடுத்து இந்த சட்டவிரோதச் சம்பவம் முறியடிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
இந்தக் கடத்தல் கும்பல் மலேசியாவில் இருந்து அண்டை நாடுகளுக்குப் போதைப்பொருள் கடத்துவதையே தொழிலாகக் கொண்டுள்ளது என்றும் இக்கும்பல் கடந்த மூன்று மாதங்களாக இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும் நம்பப்படுகிறது எனவும் ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
ஜோகூர் பாருவில் மே மாத இறுதியில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாக ஒன்பது பேர் கைது செய்யட்டுள்ளதாக ஜோகூர் காவல்துறைத் தலைவர் நேற்று தெரிவித்தார். அவர்களில் மலேசியாவைச் சேர்ந்த ஏழு ஆண்களும், ஒரு பெண்ணும் அடங்குவர். கைது செய்யப்பட்ட இன்னொருவர் இந்தோனீசியாவைச் சேர்ந்தவர். இவர்கள் அனைவரும் 26 வயது முதல் 40 வயதுக்குள்ளானவர்கள்.
கடத்தல் கும்பலிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு 215,000 ரிங்கிற்றுக்கும் மேற்பட்டது என்று நம்பப்படுகிறது. அந்தப் போதைப்பொருட்களில் 7 கிலோ கஞ்சா, 4.5 கிலோ கிறிஸ்டல் மெதம்ஃபெடமின் மற்றும் சுமார் 3 கிலோ ஹிரோயின் ஆகியவை அடங்கும். அந்தக் கும்பலிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களில் 8 வாகனங்கள், பணம், நகைகள் ஆகியவையும் அடங்கும்.
போதைப்பொருள் கடத்தல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மலேசியாவில் மரண தண்டனை விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.