இந்திய திரையுலகின் பழம்பெரும் நடிகர் திலீப்குமார் காலமானார். இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திலீப் குமார் கடந்த 1944ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி தேவதாஸ், கங்கா யமுனா, ஆன், தஸ்தான் உள்பட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார். அதன்பின்னரும் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதுவரை 65 படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பால் இந்தியா முழுவதும் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுள்ளார்.
இந்த நிலையில், வயது மூப்பு காரணமாக இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. அந்த வகையில் கடந்த வாரம், இவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த திலீப்குமார், இன்று காலை காலமானார். இவருக்கு வயது 98. திலீப் குமாரின் மறைவு பாலிவுட் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியத் திரையுலகின் மகத்தான நடிகர்களில் ஒருவரான திலீப் குமார், தாதாசாகேப் பால்கே விருதை வென்றார். மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளையும் அதிகமுறை வென்றுள்ளார்.