போர்ட்டிக்சன், ஜூலை 22:
அம்புலன்சில் கார்பன் மோனாக்சைடு கசிவு ஏற்பட்டதால் 29 வயது மருத்துவ உதவியாளர் மரணமடைந்துள்ளார். மேலும் அவ் அம்புலன்சில் இருந்த சக மருத்துவ ஊழியர்கள் மூன்று பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
சிரம்பான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைத் தலைவர் முகமட் இத்ரிஸ் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் புக்கிட் பெலாண்டுக் அரசு கிளினிக்கில் ஊழியர்களாவார்கள் என்று கூறினார்.
காலை 9.30 மணியளவில் கிளினிக்கில் எரிவாயு கசிவு ஏற்பட சாத்தியம் இருக்கின்றதாக தனது குழு ஆரம்பத்தில் எச்சரித்ததாக அபாயகரமான பொருட்கள் பிரிவு (Hazmat) நிபுணர் முகமட் தெரிவித்தார்.
“நாங்கள் விரைவாக வந்து கிளினிக்கில் சில சோதனைகளை மேற்கொண்டோம், ஆனால் எந்த வாயு கசிவுக்கான ஆதாரமும் கிடைக்கவில்லை” என்றும் கூறினார்.
மேலும் “மருத்துவ ஊழியர் ஒருவர் மயக்கம் அடைந்துள்ளதாகவும், அவரது சக ஊழியர்கள் மூவரும் சேர்ந்து அவரை ஆம்புலன்சில் போர்ட்டிக்சன் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.
இருப்பினும், அம்புலன்ஸ் போர்ட்டிக்சன் மருத்துவமனையை அடைந்தபோது, அங்குள்ள ஊழியர்கள் ஆம்புலன்சின் பின்புறப்பகுதியில் அமர்ந்திருந்த மூன்று மருத்துவ ஊழியர்களையும், ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த நபரும் மயக்கமடைவதைக் கண்டனர் என்றும் கூறினார்.
உடனே அவர்கள் குறித்த ஊழியர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக விரைந்து செயல்லப்பட்டனர். ஆனால் ஒருவர் இறந்துவிட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.
“அம்புலன்சினுள் ரசாயன அல்லது எரிவாயு கசிவு ஏற்பட்டிருக்க கூடும் என்பதை நாங்கள் அப்போது உணர்ந்தோம். அந்த வாகனம் சம்பந்தப்பட்ட இதே போன்ற சம்பவம் நடந்ததாக நேற்று (ஜூலை 21) தெரிவிக்கப்பட்டது.
அம்புலன்ஸ் முன் அமர்ந்திருந்த டிரைவர் மற்றும் பிற மருத்துவ பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்பதை உறுதிப்படுத்த அவரது குழு தொடர்ந்து விசாரணை நடத்தும் என்றும் முகமட் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும், பின்னர் இது சம்மந்தமான அறிக்கை வெளியிடப்படும் என்றும் மாநில சுகாதாரக் குழுத் தலைவர் எஸ்.வீரப்பன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















