கோலாலம்பூர்: ஜாலான் மெட்ரோ பெர்டானாவில் நேற்று மாலை நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர்வாசிகள் என்று கருதப்படும் நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
செந்தூல் மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரி பெஹ் எங் லாய் இச்சம்பவம் பற்றி கூறிய போது, நேற்று மாலை 5.30 மணியளவில் முகமூடி மற்றும் தலைக்கவசம் அணிந்திருந்ததுடன் சுத்தியல் மற்றும் கோடரிகள் போன்ற ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் சந்தேகநபர்கள் நகைகள் மற்றும் வளையல்கள் வடிவில் பல நகைகளை திருடியதாகவும் அவற்றின் மதிப்பு நூறாயிரக்கணக்கான வெள்ளிகள் என்றும் நம்பப்படுகிறது என்றார்.
ஆரம்பகட்ட விசாரணையில் “சம்பவத்தின் போது, ஒரு சந்தேகநபர் மைசெஜதெராவை ஸ்கேன் செய்வது போல் நடித்தார். அப்போது மற்ற மூன்று சந்தேக நபர்களும் கடைக்குள் நுழைந்து ஒரு நிமிடத்திற்குள் பல வளையல்கள் மற்றும் கழுத்தணிகளுடன் ஓடிவிட்டனர்” என்று அவர் கூறினார்.
அத்தோடு இச்சம்பவத்தின் போது, கடை வளாகத்தில் ஏழு பெண் தொழிலாளர்கள் இருந்ததாகவும், சந்தேகநபர் தள்ளியதால் அவர்களில் ஒருவர் மயங்கி விழுந்ததாகவும் பெஹ் கூறினார்.
இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள்களை போலீசார் கண்டறிந்துள்ளதாகவும், மேலும் இச்சம்பவம் தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்களை விசாரணைக்கு உதவ முன்வருமாறும் அவர் கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துக்கொண்டார்.
-பெர்னாமா