சூரிய ஒளி கூட கிணற்றின் சில அடிகள் வரை மட்டுமே தொடுகிறது என்பதால் இருளாகவே தோன்றும் இந்த கிணற்றுக்குள் என்ன இருக்கிறது என்பது மர்மமாகவே இருந்த நிலையில் தற்போது ஆராய்ச்சியில் வெட்டவெளிச்சமாகி உள்ளது.ஏமனில் உள்ள நரகத்தின் கிணறு என்றழைக்கப்படும் இயற்கையான கிணறு விலகாத மர்மங்களை கொண்டிருப்பதாக கருதப்படுகிறது.
ஏமன் – ஓமன் எல்லையில் மஹ்ரா பாலைவனப்பகுதியில் இந்த மர்ம கிணறு அமைந்துள்ளது. 90 அடி அகலம் கொண்ட இந்த கிணறு 300 முதல் 750 அடி ஆழம் கொண்டதாக இருக்கலாம் என கருதப்பட்டது.
இதன் அருகில் செல்லும் பொருட்கள் உள்ளே இழுத்துக் கொள்ளப்படும் என்றும், இது பேய்களை அடைத்து வைக்கும் சிறை என்றும் உள்ளூர் கதைகள் சொல்லப்படுகின்றன. ஆனால் அதனுள் என்ன இருக்கிறது என்பது தங்களுக்குத் தெரியாது என ஏமன் அதிகாரிகள் இதுவரை கூறி வந்தனர்.
சூரிய ஒளி கூட கிணற்றின் சில அடிகள் வரை மட்டுமே தொடுகிறது என்பதால் இருளாகவே தோன்றும் இந்த கிணற்றுக்குள் என்ன இருக்கிறது என்பது மர்மமாகவே இருந்து வந்தது. இதனை நரகத்தின் கிணறு எனவும் அதற்கான வழி எனவும் கட்டுக்கதைகள் சொல்லப்பட்டு வந்த நிலையில் ஓமன் நாட்டின் குகை பயணக் குழுவைச் சேர்ந்த 10 ஆய்வாளர்கள் குழு, இந்த மர்ம குழி பற்றி ஆய்வு செய்ய முடிவு செய்தது. ஆய்வு குழுவினர் குழியில் உரிய உபகரணங்களுடன் எவ்வித தயக்கமுமின்றி தைரியமாக கிணற்றின் உள்ளே இறங்கினர்.
இந்த கிணறு கடுமையான துர்நாற்றத்தையும் வீசியுள்ளது. கிணற்றின் உள்ளே ஆய்வாளர்கள் பயணிக்க நீண்ட குகை போன்று கிணறு நீண்டு கொண்டே சென்றுள்ளது. அதோடு உள்ளே அழகிய நீர் வீழ்ச்சியும் இருந்துள்ளது. அதுமட்டுமல்லாது, அங்கு ஏராளமான பாம்புகள், இறந்த விலங்குகள், குகை முத்துக்களும் இருந்துள்ளன. இவை ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. விரைவில் இது குறித்த இறுதி ஆய்வுகள் வெளிவரும்,’ என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.