கூச்சிங்: சரவாக் பேரிடர் மேலாண்மை குழு (SDMC) ஞாயிற்றுக்கிழமை (அக்.10) முதல் மாநிலத்தில் திரையரங்குகளை மீண்டும் செயல்பட அனுமதித்துள்ளது.
நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், தேசிய மீட்பு திட்டத்தின் 3 வது கட்டத்தின் கீழ் மீண்டும் செயல்படுவதற்கு திரையரங்குகளுக்கு வழங்கப்பட்ட ஒப்புதல், நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும் என்று அந்த குழு கூறியுள்ளது.
“படைப்புத் துறைக்கான (சினிமா) நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) SMDC இணையதளத்தில், http://sarawakdisastermc.com இல் காணலாம்,” என்று அது கூறியுள்ளது.
இதற்கிடையில், நேற்று சரவாக்கில் 1,339 கோவிட் -19 தொற்றுக்கள் பதிவாகியிருந்தன. 1.57 விழுக்காட்டினர் அல்லது 21 பேருக்கு மட்டுமே ஆக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டர் உதவி தேவைப்படும் நுரையீரல் தொற்று ஏற்பட்டிருந்தது. மீதமுள்ள 98.43 விழுக்காட்டினர் அல்லது 1,318 பேருடன் தொடர்புடைய தொற்றுக்கள் அறிகுறியற்றவை அல்லது லேசான அறிகுறிகளைக் கொண்டிருந்தன.
மேலும், கோவிட் -19 காரணமாக செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6 வரை எட்டு இறப்புகள் சரவாக்கில் பதிவு செய்யப்பட்டன, ஒன்பது கொத்தணிகள் (cluster) நேற்று காலாவதியாகிவிட்டன, மொத்த செயலில் உள்ள கோவிட்-19 கொத்தணிகளின் எண்ணிக்கை 80 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.