கோலாலம்பூர் : படிவம் 2 மாணவர்கள் சம்பந்தப்பட்ட ஆன்லைன் தேர்வின் போது, பாலியல் காட்சிக் காணொளி குறுக்கீடு செய்தது தொடர்பில் கல்வி அமைச்சகம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய அதிகாரிகளால் முழுமையாக ஆராயப்பட வேண்டும், ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு பாதுகாப்பான தளமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று DAP கட்சியின் தியோ நீ சிங் இன்று கூறினார்.
விசாரணையின் முன்னேற்றம் குறித்து அமைச்சகம் தொடர்ந்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களுக்கு ஆளாக மாட்டார்கள் என்றும் உறுதி அளிக்கப்படும் என்று முன்னாள் துணை கல்வி அமைச்சருமான அவர் கூறினார்.
“கல்வி அமைச்சகம் இதை ஒரு தீவிரமான விஷயமாக பார்க்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் ஆன்லைன் கற்கைகளுக்கு பாதுகாப்பான தளங்களைப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றார். மேலும் இதனை தொழில் ரீதியான பிரச்சனையையாக எண்ணி உடனே தீர்க்கவும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
நேற்று, கோலாலம்பூரில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் படிவம் 2 மாணவர்கள் ஆன்லைனில் ஒரு தேர்வுக்கு அமர்ந்திருந்தபோது, திடீரென அவர்களது கணினி திரைகளில் பாலியல் காட்சிக் காணொளி தோன்றியது.
அதனை தொடர்ந்து, உடனடியாக இணைய வகுப்பிலிருந்து மாணவர்களை வெளியேறும் படி ஆசிரியர் பணித்ததாகவும் , மேலும் அவர்களுக்கான தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.