புத்ராஜெயா, பிப்ரவரி 5 :
செம்பனைத் தோட்டத் துறையில் வெளிநாட்டு தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான சிறப்பு விலக்கு மூலம், ஜனவரி 28 முதல் நேற்று வரை மொத்தம் 7,500 விண்ணப்பங்களை மனித வள அமைச்சகம் (KSM) பெற்றுள்ளது என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன்தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு மற்றும் ஒப்பந்ததாரர்களிடமிருந்து அதாவது விண்ணப்பிக்கத் தகுதியற்ற முதலாளிகளால் விண்ணப்பிக்கப்பட்ட சில வெளிநாட்டு ஊழியர்களுக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்க முடியவில்லை.
“அனைத்து விண்ணப்பப் படிவங்களையும் முதலாளியே நிரப்ப வேண்டும் என்பதையும், அவர்கள் எந்த ஒரு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தின் சேவைகளிலும் ஈடுபடக் கூடாது என்பதையும் அனைத்து முதலாளிகளுக்கும் நினைவூட்ட விரும்புகிறேன் என்றார்.
“தனியார் வேலைவாய்ப்பு முகவர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக மட்டுமே செயல்பட முடியும் மற்றும் முதலாளிகள் சார்பாக வெளிநாட்டு ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்ய அவர்கள் விண்ணப்பிக்க முடியாது,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இதற்கிடையில், பிற துறைகளில் உள்ள முதலாளிகளிடமிருந்தும் மனித வள அமைச்சகம் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது, அவை பிப்ரவரி 15 முதல் விண்ணப்பத்திற்கு திறக்கப்படும் என்று சரவணன் மேலும் கூறினார்.
ஜனவரி 15ஆம் தேதி, www.fwcms.com.my என்ற இணையதளத்தின் மூலம், 32,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களை சிறப்பு விலக்கு மூலம் ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பம் ஜனவரி 28 முதல் திறக்கப்படும் என்று சரவணன் முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.