கோலாலம்பூர், மார்ச் 17 :
கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹமட் சானுசி முஹமட் நோர் பரிந்துரைத்தபடி, இந்த நாட்டிலிருந்து (கெடாவிலிருந்து) கெத்தும் இலைகளை தாய்லாந்திற்கு ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது, குறித்த எந்த முடிவும் அமைச்சரவையின் மூலம் எடுக்கப்பட வேண்டும் ஏனெனில் இது தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுவதன் மூலமே அது சாத்தியமாகும் என்று காவல்துறை துணை தலைவர் டத்தோ ரஸாருடின் ஹுசைன் தெரிவித்தார்.
“கெத்தும் இலை, விஷம் சட்டம் 1952 இன் கீழ் வருகிறது, எனவே கெடா மந்திரி பெசார் இது குறித்து தனது சொந்த கருத்துக்களைக் கொண்டிருக்கலாம், இருப்பினும் இந்த யோசனை நல்லதாக இருந்தால், ஒருவேளை அது மத்திய அரசின் ஒப்புதலுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றார்.
” இந்த முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டால், கெத்தும் இலைகள் இந்த சட்டத்திலிருந்து நீக்கப்பட வேண்டும்,” என்று அவர் இன்று, செராசிலுள்ள ரோயல் மலேசியன் போலீஸ் கல்லூரிக்கும் KOP Mantap க்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
மருத்துவ நோக்கங்களுக்காக கெடாவிலிருந்து தாய்லாந்திற்கு கெத்தும் இலைகளை சட்டப்பூர்வமாக ஏற்றுமதி செய்ய முஹமட் சானுசியின் முன்மொழிவு குறித்து கருத்து கேட்டபோது, அவர் மேற்கண்டவாறு கூறினார்.