கோலாலம்பூர், செப்டெம்பர் 1 :
RM1.25 பில்லியன் மதிப்பிலான சோலார் ஹைபிரிட் திட்டம் தொடர்பான மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் விடுவிக்கப்படுவாரா அல்லது குற்றவாளியாகக் அறிவிக்கப்படுவாரா என்பது குறித்து தெரிந்து கொள்ள, இன்று காலை முதல் கோலாலம்பூர் நீதிமன்ற வளாகம் பரபரப்பாக உள்ளத்துடன் நீதிமன்றத்தை சுற்றி கட்டுப்பாடு கடுமையாக்கப்பட்டுள்ளது.
மலேசிய தன்னார்வத் துறை (ரேலா) உறுப்பினர்கள் அங்கு பாதுகாப்புக் கடமையிலுள்ளதுடன் நீதிமன்ற வளாகத்தின் நுழைவாயிலில் கூம்புகள் வைக்கப்பட்டுள்ளன, மேலும் நுழைவாயிலை தாண்டி நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய முயலும் பொதுமக்கள், அனுமதி வழங்குவதற்கான நீதிமன்ற நடவடிக்கைகளுக்கான ஆதாரத்தைக் காண்பிக்க வேண்டும்.
வழக்கின் தீர்ப்பின் நடவடிக்கைகளைப் பின்பற்றுவதற்கு ஊடகங்கள் ஏற்கனவே காலை 7.45 மணி முதல் அவ்வளாகத்தில் குவியத் தொடங்கியுள்ளன.
இந்த வழக்கின் தீர்ப்பை தயாரித்தது முஹமட் ஜைனி அல்ல, மாறாக வேறு தரப்பினர் என்று ஒரு செய்தி இணையதளம் வெளியிட்டதைத் தொடர்ந்து, இன்று தான் எதிர்கொள்ளும் ஊழல் வழக்கில் முடிவெடுக்க வேண்டிய உயர்நீதிமன்ற நீதிபதி முஹமட் ஜைனி மஸ்லான் மீது தான் நம்பிக்கை இழந்துவிட்டதாக கூறி, கடந்த திங்கட்கிழமை ரோஸ்மா மனு அளித்திருந்தார்.
அதாவது “முஹமட் ஜைனி இந்த வழக்கிலிருந்து விலகிக் கொள்ளுமாறும், தனது வழக்கு வேறொரு நீதிபதியால் விசாரிக்க வேண்டும் அல்லது மறுபரிசீலனை செய்யுமாறும் ” தனது விண்ணப்பத்தில் ரோஸ்மா இந்த விஷயத்தைத் தெரிவித்தார்.
ஜெபக் ஹோல்டிங்ஸ் முன்னாள் நிர்வாக இயக்குநர் சைட் அபாங் சம்சுதீனிடமிருந்து ரோஸ்மா RM187.5 மில்லியன் கோரியதாகக் கூறப்படும் ஒரு குற்றச்சாட்டு மற்றும் அவர் மூலம் RM6.5 மில்லியன் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் இரண்டு குற்றச்சாட்டுகளை அவர் எதிர் நோக்கியுள்ளார்.
369 சரவாக் கிராமப்புற பள்ளிகளுக்கு ஹைப்ரிட் ஃபோட்டோவோல்டாயிக் சோலார் சிஸ்டம் ஒருங்கிணைந்த திட்டம் மற்றும் ஜென்செட்/டீசலின் பராமரிப்பு மற்றும் இயக்கத்தை பாதுகாக்க நிறுவனத்திற்கு உதவும் ஒரு தூண்டுதலுக்காக இது கையூட்டாக கொடுக்கப்பட்டது.
முதலில் இந்த வழக்கின் தீர்ப்பு ஜூலை 7-ம் தேதிக்கு என்று அறிவிக்கப்பட்டது, ஆனால் அது நீதிமன்றத்தால் செப். 1 அதாவது இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் ரோஸ்மா குற்றவாளி என அறிவிக்கப்பட்டால், அவர் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், லஞ்சத்தை விட ஐந்து மடங்கு அபராதமும் விதிக்கப்படலாம்.
ஏற்கனவே ரோஸ்மாவின் கணவரும் முன்னாள் பிரதமருமான நஜிப் RM42 மில்லியன் SRC இன்டர்நேஷனல் ஊழல் வழக்கில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, காஜாங் சிறையில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.