மக்கள் வெள்ளத்தில் இறுதி ஊர்வலத்துக்கு புறப்பட்டது கால்பந்தின் பிதாமகன் பீலே உடல்

கால்பந்து உலகின் பிதாமகனும், உலகக் கோப்பை கால்பந்தில் 3 முறை மகுடம் சூடிய ஒரே வீரரான பிரேசிலின் பீலே (வயது 82) புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவையொட்டி பிரேசிலில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

பிரேசில் நாட்டின் சாவ் பாலோ ஆஸ்பத்திரியில் உள்ள பீலேவின் உடல் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டது. உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை 10 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்தநிலையில் லட்சக்கணக்கான மக்களின் கண்ணீல் கடலில் கால்பந்து ஜாம்பவான் பீலே உடல் இறுதி ஊர்வலத்துக்கு எடுத்து செல்லப்படுகிறது. சாண்டோஸ் கால்பந்து மைதானத்தில் இருந்து ஊர்வலம் கிளம்பியது. பிரேசிலுடன் மூன்று உலகக் கோப்பைகளை வென்று உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் பீலேவின் இறுதிச் சடங்கு தற்போது சாண்டோஸில் நடைபெற்று வருகிறது.

­

இறுதி சடங்கில் அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. பீலேவின் உடல் அடங்கிய சவப்பெட்டி அங்குள்ள தெருக்களின் வழியாக எடுத்து செல்லப்படும் போது, அவரது தாயார் 100 வயதான செலிஸ்டி அரன்டெஸ் வசிக்கும் இல்லத்தையும் கடந்து செல்ல இருக்கிறது. படுத்த படுக்கையாக, மகன் இறந்த தகவலை புரிந்து கொள்ளும் நிலையில் செலிஸ்டி இல்லை. இறுதியில் 4.4 ஏக்கர் நிலப்பரப்பில், 14 அடுக்கு மாடிகளை கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தில் பீலேவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

இங்குள்ள பெட்டகத்தில் பதப்படுத்தப்பட்ட அவரது உடல் வைக்கப்படும். ஏறக்குறைய 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்டகங்கள் இங்கு உள்ளன. இது தான் உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here