மலேசியா தற்போது தெளிவான கொள்கைகளுடன் நிலையான ஒரு அரசாங்கத்தின் கீழ் இருப்பதால், மலேசியாவில் அதிக முதலீடு செய்ய சவூதி அரேபியாவில் உள்ள வணிக சமூகத்தினருக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.
அங்குள்ள நூற்றுக்கணக்கான சவுதி மற்றும் மலேசிய தொழிலதிபர்களுடன் பேசிய பிரதமர், தனது தலைமையிலான புதிய அரசாங்கம், வர்த்தகம் மற்றும் மதானி நிகழ்ச்சி நிரலை ஆதரிக்கும் சீர்திருத்தங்களுடன் நாட்டில் வணிகம் செய்வதற்கு ஏற்புடையது சூழலை உருவாக்குவதற்கு உறுதிபூண்டுள்ளது என்று கூறினார்.
“இலக்கவியல் தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பு போன்ற விஷயங்களில் முதலீடு செய்ய நாங்கள் நிச்சயமாக உங்களை ஊக்குவிப்போம், இது தொடர்பில் ரமலானின் பின்னர் உங்கள் பிரதிநிதிகள் மலேசியாவிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் ” என்று அன்வார் தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை (மார்ச் 23) ஜித்தாவிலுள்ள இஸ்லாமிய மேம்பாட்டு வங்கியின் (ISDB) தலைமையகத்தில், சவுதி மற்றும் மலேசிய வணிக சமூகங்களுடனான ஒரு கூட்டத்தில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு கூறினார்.
பிரதமர் சவூதி அரேபியாவிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.