அமெரிக்காவின் தீவு மாகாணம் ஹவாய். இந்த மாகாணத்தில் சேவல் சண்டை போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அமெரிக்காவில் மொத்தமுள்ள 50 மாகாணங்களிலும் சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்ட போதும் சில மாகாணங்களில் தடையை மீறி சேவல் சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹவாய் தீவு மாகாணத்தின் ஹொனொலுலு நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு சிலர் சேவல் சண்டை போட்டி நடைபெற்றது.
இதில் பலர் தங்கள் சேவல்களை கொண்டு களத்தில் இறக்கி விளையாடினர். சேவல் சண்டையின் போது திடீரென மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினர் ஒருவர் மீது ஒருவர் கடுமையாக தாக்கினர். அப்போது சேவல் சண்டையில் பங்கேற்ற 20 வயது இளைஞர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு சேவல் சண்டையில் பங்கேற்றவர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.