மியன்மார் – சென்னை இடையே நேரடி விமானச் சேவை தொடங்கி உள்ளது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மியன்மாரில் தமிழகத்தைச் சேர்ந்த கணிசமான எண்ணிக்கையிலானவர்கள் வசித்து வருகின்றனர். எனினும் அந்நாட்டுக்கு தமிழகத்தில் இருந்து நேரடி விமானச் சேவை இல்லை என்ற குறைபாடு நீடித்து வந்தது.
இந்நிலையில், மியன்மார் ஏர்வேஸ் விமான நிறுவனம் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அந்நாட்டின் யங்கூன் நகருக்கும் சென்னைக்கும் இடையே புதிய விமானச் சேவையைத் தொடங்கி உள்ளது.
நேற்று முன்தினம் யங்கூன் நகரில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட விமானம் மூலம் 48 பயணிகள் சென்னை வந்தடைந்தனர். சென்னை அனைத்துலக விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த அந்த விமானத்துக்கு இருபுறமும் தண்ணீர் பாய்ச்சி வரவேற்பு அளிக்கப்பட்டது. 48 பயணிகளையும் விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர், அதே விமானம் சென்னையில் இருந்து 78 பயணிகளுடன் யங்கூனுக்கு புறப்பட்டுச் சென்றது.
இனி வாரந்தோறும் சனிக்கிழமையன்று யங்கூன், சென்னை இடையே நேரடி விமானம் இயக்கப்படும் என்றும் யங்கூனில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் விமானம் பகல் 10.15 மணிக்கு சென்னை வந்தடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே விமானம் சென்னையில் இருந்து மீண்டும் 11.15 மணிக்குப் புறப்பட்டு யங்கூனுக்கு செல்லும் என்றும் பயணிகளின் வரவேற்பை பொறுத்து, இந்த விமானச் சேவை அதிகரிக்கப்படும் என்றும் கூறினர்.