ஜப்பானில் சிபா மாகாணத்தில் உள்ள மாட்சுடோவில் வேலையில்லாமல் வசித்து வந்தார் ஹிரோகோ ஹடகாமி. யாரும் இல்லாமல் தனிமையில் வாழ்ந்து வந்த இவருக்கு தன்னை மற்றவர்கள் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. இதற்காக இந்த பெண், கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு அவசரக் காரணங்களைக் கூறி, அவர் தனது வீட்டிலிருந்தும், அண்டை வீடுகளில் இருந்தும் பல முறை அழைப்புகளை மேற்கொண்டிருக்கிறார்.
குறிப்பாக கடந்த ஆகஸ்ட் 2020 ஆம் ஆண்டு முதல் மே 2023 ஆண்டு வரை வயிற்று வலி, கால் வலி என பல்வேறு காரணங்களை சொல்லி ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்களைக் கேட்டு வரிசையாக கால் செய்துள்ளார். ஏதோ அவசர நிலை என்று கருதி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று பார்த்ததும், நான் யாருக்கும் கால் செய்ய வில்லை என கூறி மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இவ்வாறு ஒவ்வொரு முறை கால் செய்து வீட்டிற்கு ஆம்புலன்ஸ் வரும் போது, எனக்கு தேவையில்லை என்றும், யார் கால் செய்தார்கள் என்று தெரியவில்லை என்று அடிக்கடி கூறியுள்ளார்.
இந்த நிகழ்விற்கு பிறகு, தீயணைப்புத் துறை மற்றும் போலீசார் அந்த பெண்ணை எச்சரித்துள்ளனர். ஆனால் இந்த எச்சரிக்கையை மீறியும் மாறி மாறி அப்பெண் அவர்களுக்கு கால் செய்வதை நிறுத்தியபாடில்லை. சுமார் 2,700 முறை கால் செய்துக் கொண்டிருந்த நிலையில் தான், இது தொடர்பாக போலீசாரிடம் புகார் முன்வைக்கப்பட்டுள்ளது.



















