சுங்கை பூலோ, ஜூலை 31:
சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், இன்று காலை சுமார் 11 மணி முதல் சுங்கை பூலோ சிறைச்சாலையின் முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மொத்தம் 69 பேரை விடுதலை செய்யுமாறு கோரி, அவர்கள் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சொஸ்மா கைதிகள் மொத்தம் 69 பேரில் 34 கைதிகள் சுங்கை பூலோ சிறைச்சாலையிலும் 36 பேர் கெடா, அலோர் ஸ்டார் சிறைச்சாலையிலும் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சுங்கை பூலோ சிறையில் உள்ள சொஸ்மா கைதிகளும் உண்ணா விரதத்தில் இறங்கியிருப்பதாக சிறைச் சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தங்களின் குடும்ப உறுப்பினர்கள் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, இது நாள் வரையிலும் அவர்கள் பற்றிய எந்த தகவல்களும் தமக்கு தெரியவில்லை என்றும். அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்தும் தங்களுக்கு எந்த தகவலும் தெரியவில்லை என்றும் கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
மேலும் இந்த விவகாரத்தில் நிதிமன்றங்கள் ஏன் மௌனமாக இருக்கின்றன? என்றும் தமக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் சம்பவ இடத்திற்கு வருகைதந்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சொஸ்மா கைதிகளின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.