லண்டன், ஆகஸ்ட்டு 5:
பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்கின் வீட்டைக் கறுப்புத் துணிகளைக் கொண்டு போர்த்திய சுற்றுப்புற ஆர்வலர்களை அந்நாட்டுக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
படிம எரிபொருள் தொடர்பாக ரிஷி சுனக்கின் கொள்கையை எதிர்த்து சுற்றுப்புற ஆர்வலர்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பிரிட்டனின் கிழக்குக் கடற்பகுதியில் எண்ணெய், எரிவாயுப் பணிகளை மேற்கொள்ள ரிஷி சுனக் கடந்த வாரம் நூற்றுக்கணக்கான உரிமங்களுக்கு அனுமதி வழங்கினார்.
இதனால் சுற்றுப்புற ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்தனர்.
கிரீன்பீஸ் அமைப்பைச் சேர்ந்த நான்கு ஆர்வலர்கள் ரிஷி சுனக்கின் வீட்டுக் கூரை மேல் ஏறி பெரிய கறுப்புத் துணிகளால் கட்டடத்தைப் போர்த்தினர். இதைக் காட்டும் காணொளியை அந்த அமைப்பு வெளியிட்டது.
அந்த ஆர்வலர்கள் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் ரிஷி சுனக்கின் வீட்டுக் கூரையில் இருந்ததாகவும் அவர்களைக் காவல்துறையினர் பிறகு கைது செய்ததாகவும் கிரீன்பீஸ் அமைப்பு தெரிவித்தது.




















