நியூயார்க், அகஸ்ட்டு 9:
அமெரிக்காவின் நியூயார்க் நகரக் கடற்கரையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு சுறாமீன் பொதுமக்களைத் தாக்கியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (அகஸ்ட்டு 7) 65 வயது மாது ஒருவர் ‘ராக்வே’ கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்தபோது சுறாவால் தாக்கப்பட்டார்.
சுறா அந்தப் பெண்ணின் காலைக் கடித்தது. வலி தாங்காமல் கதறிய அப்பெண்ணைப் பணியில் இருந்த உயிர்காப்பாளர் ஒருவர் காப்பாற்றினார். ஆயினும், ஒன்பது கிலோ தசையை அவர் இழந்துவிட்டதாகக் கூறப்பட்டது.
குறித்த பெண்ணிற்கு முதலுதவி கொடுக்கப்பட்ட பிறகு, அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். பெண் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் ஆயினும் அவர் உடல்நலம் தேறி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நியூயார்க் நகர கடற்கரையில் சுறாத் தாக்குதல் சம்பவம் மிகவும் அரிதானது.
இதற்கு முன்னர் 2017ஆம் ஆண்டு அலையாட்ட வீரர் ஒருவர் சுறாவால் தாக்கப்பட்டார். அவரது காயத்திற்கு 40 தையல்கள் போடப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டது.