பாலி:
பாலித்தீவு கடற்கரையில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை மட்டாரமின் வடக்குப் பகுதியில் 203 கிலோமீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நிலஆய்வக அமைப்பு தெரிவித்தது.
நிலநடுக்கம் நிலமட்டத்தின் 516 கிலோமீட்டருக்கு அடியில் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தோனேசியாவின் உள்ளூர் நேரப்படி, காலை 4 மணிவாக்கில் பாலி, லொம்பாக் கடற்கரைப் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அதன் பின்னர் அப்பகுதிகளில் 6.1, 6.5 ரிக்டர் அளவில் இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தோனேசிய நில ஆய்வகம் தெரிவித்தது.
பாலியில் உள்ள மெர்கூய்ர் கூட்டா ஹோட்டலில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் நில அதிர்வுகளை உணர்ந்ததால் அவர்கள் இருந்த அறைகளில் இருந்து வெளியேறியதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டன.
இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் ஹோட்டலின் மற்ற பகுதிகளில் இயல்பாகக் காணப்பட்டதாகவும், கட்டடங்களுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்றும் அவை கூறின.
அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் பாலி வட்டாரத்தில் உள்ள மக்கள் சற்று பதற்றத்தில் உள்ளனர்.
முதல் நிலநடுக்கத்தின் போது தூங்கிக் கொண்டிருந்த தனது கணவரை எழுப்பியதாகவும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் உடனடியாக தனது குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறியதாகவும் ஆர்டியலா யுலியசிட்ரா என்னும் 31 வயது மாது தெரிவித்தார்.
முதல் நிலநடுக்கத்தின் போது லேசாக அதிர்வுகளை உணர்ந்தோம், ஆனால் இரண்டாவது நிலநடுக்கத்தின் போது வீடு ஆடத்தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
நிலநடுக்கம் கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்கள் உணரப்பட்டதாக சமூக ஊடகங்களில் அவ்வட்டாரத்தில் இருந்த சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர்வாசிகளும் பதிவிட்டனர்.
நிலநடுக்கத்தின் போது ஹோட்டல் அறைகளை விட்டு சுற்றுலாப் பயணிகள் வெளியேறும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பதிவாகியுள்ளன.