இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் மேற்குப் பகுதியில் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதலில் இராணுவ வீரர்கள் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
உடலில் வெடிபொருளைப் பிணைத்திருந்த மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் இராணுவ வாகன அணிவகுப்பின்மேல் தனது மோட்டார் சைக்கிளை மோதியதாக பாகிஸ்தானிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
பன்னு மாவட்டத்தில், எல்லையிலிருந்து 61 கிலோமீட்டர் தொலைவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பக்கத்து நாடான ஆஃப்கானிஸ்தானில் ஈராண்டுகளுக்குமுன் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினர். அதற்குப் பிறகு பாகிஸ்தானில் வன்செயல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக எல்லைப் பகுதியில் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதை கண்காணிக்கமுடிகிறது.
தாக்குதல்காரர் வியாழக்கிழமை இராணுவ லோரியின்மேல் மோதியதை பாகிஸ்தனிய அமைச்சர் ஃபெரோஸ் ஜமால் ஷா, ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தினார்.
இச்சம்பவத்தில் 9 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் மேலும் ஐவர் காயமடைந்ததாக பாகிஸ்தானிய இராணுவம் தெரிவித்தது. ஆனால் 20 பேர் காயமடைந்ததாக அமைச்சர் ஷா கூறினார்.
இந்தத் தாக்குதல் ‘கோழைத்தனமான பயங்கரவாத நடவடிக்கை’ என்று பாகிஸ்தானின் பராமரிப்புப் பிரதமர் அன்வார்-உல்-ஹக் கக்கர் குறிப்பிட்டார்.





















